Saturday, October 5, 2024

அன்பின் ஆசான்களே...!!


அகரம் கற்று

சிகரம் தொட

அச்சாணியாய் சுழலும்

 அனைத்து ஆசிரிய

 பெருந்தகைகளுக்கும்

இந்தக் கவிதை

 இன்றிலிருந்து

  ஒரு ஆற்றுப்படை!


 முட்களுக்கிடையில் 

சிக்கித் தவித்த

 இந்த சின்ன மலர்களை

 உங்கள் மூச்சுக்காற்றினால் 

உயிர் பெறச் செய்த 

அன்புள்ளங்களே....


எத்தனை அன்பு!

எத்தனை அரவணைப்பு!

எத்தனை அறிவுரை!


உங்கள் கம்பின்

 சிறு பங்கும்

 உங்கள் அன்பின் 

பெரும் பங்கும்

 பதம் பார்த்ததால்

 முகை வெடித்த 

மொட்டுக்களல்லவா

நாங்கள் ...


ஆமாம் 


சிதைக்கப்படாத கற்கள் சிலைகள் ஆவதில்லை!


 தீயில் சுடாத தங்கம் அணிகலன் ஆவதில்லை!!


 அடித்துத் துவைக்காத துணிகள் 

வெளுப்பதும்  இல்லை!!


 பிழிந்து எடுக்காமல்

 கரும்பு சர்க்கரை ஆவதுமில்லை!!


 அதுபோலத்தான்....


 ஆசிரியர்கள் நீங்கள்

 வழி நடவாமல்

 நாம் ஆன்றோர் ஆவதில்லை!!     


சிறு தவறுகள் நாம் செய்ய


 அன்பால் அறிவுறுத்தி


 அழகாய் கற்றுத் தந்த

 அற்புத உள்ளம் கொண்டவர்களே....!


 ஒரு நாள் நீங்கள் வராவிட்டாலும் 

தவித்து வாடிப் போகிறோம் நாங்கள்...


காலை பனித்துளி எல்லாம் 

நம்மிடம் காரணம் கேட்கின்றன 

யாரைத் தேடி அலைந்து 

சோர்கிறீர்கள் என்று ...??



ஆமாம் ...

குடும்பம் தாண்டிய குழந்தைகளின் 

முதல் சமூக உறவு

 நீங்கள் தான்!.


அலைபாயும் 

மனசுகளை 

அடக்கிவிடும்

 உங்கள் அதட்டல்கள் !!



கவனச் சிதறல்களை

 பறந்து வந்து

 முறியடிக்கும் 

உங்கள் ஒற்றைப் பார்வை...!!


முதல் பாராட்டு


 முதல் பரிசு


முதல் தோல்வி


முதல் தோள் கொடுப்பு


என அனைத்திலும் 

 நீங்கள் இருக்கிறீர்கள் ...!!

மொத்தத்தில் 

மழலைகள் எங்களின்

 முதல் காதல் 

நீங்கள் தான் !!


குறும்புகள் ரசித்து


 குழப்பங்கள் தீர்த்து


 தவறுகள் திருத்தி


 திறமைகள் போற்றி


 வெற்றிக்கு விழா எடுத்து


 தோல்விக்கு தோள் கொடுத்து 


வருடம் முழுதும் 

வகுப்பறைக்குள் சுமந்து


 வாழ்த்தி வழி அனுப்பும் 

ஆசிரியர்கள்  நீங்கள்


எமக்கு வாடகை பெற்றோர்களே...!!


உமது கைகளால் செதுக்கப்பட்டு 

உமது அன்பினால் அரவணைக்கப்பட்டு

உமது விரல்களால் பட்டை தீட்டப் பட்ட


 சின்னப் பூக்களின்

இதய அன்பின் வெளிப்பாடு....


இந்தக்கவிதை !


உங்களுக்காய் கவி படிக்க

 நினைக்கையில்.... 

வார்த்தைகள் இருந்தும்


 மௌனமாகிப்

போகிறேன்!!

எனவே.....

ஆசிரியர் பெருந்தகைகளே....

உங்கள் தினத்தில் உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்



 நீங்கள்  சென்ற இடமெல்லாம் வென்ற இடமாகவும்..


நிலையான சுகத்துடன் நீடூழி வாழ்ந்திடவும்


 உங்களுக்காய் வல்லவன் அல்லாஹ்வை இரு கரமேந்தி  பிரார்த்தித்து

விடை பெறுகிறேன்.!!


நன்றி! !


இளையநிலா

பஸ்மினா அன்ஸார்

06/10/2024