மாரி கால குளிரினை ரசித்துக்கொண்டே தன் இயற்கை பந்தங்களுடன் விளைடாடி மகிழ தன் சேலைக்கு மேலால் போர்வையொன்றை போர்த்தியவளாக நந்தவனத்தை வந்தடைந்தாள் கவியரசி. அவளைக்கண்டதும் வாடிப்போய் மறுபுறம் திரும்பிக்கொண்டது ரோஜா மலர். ''மலரே.....கோபமென்ன...உன்னில் கமழும் நறுமணத்தை,உன் இத்ழ்களின் மென்மையை,எல்லாவற்றுக்கும் மேலாக என் உள்ளம் கவர்ந்த உன்னழகைப்பாடஎனக்கோர் அவகாசம் தருவாயா...?'' மலரோ குனிந்த தலை நிமிராமலே ''கவியரசி... ஒரு நாள் வாழ்க்கை வாழும் என்னைப்பாடுவதில் உனக்கென்ன லாபம்..'' எனகுரல் தடுமாறக்கேட்டது,
''ஒரு நாளே வாழ்ந்தாளும் உன்னைப்போல் இனிமையாகவும்,செழுமையாகவும், பூஜையறை பூர்வீக சொத்தாகவும்,வைபவங்களில் முன்னணி வகிக்கும் பிரதம அதிதியாகவும்.மணப்பெண் கூந்தலில் மங்கா ஜோதியாகவும்.மணவறையில் மணம் வீசும் தாரகையாகவும்,எல்லையிலா மானிட தேவைகளுக்கு மனமுவந்து உயிரை அர்ப்பணிக்கும் உன்னைப்பாட எனக்கு லாபம் வேண்டுமா...? என இனிமையாக கேட்க ரோஜா பெருமிதம் கொண்டு கவியரசிக்கு தலை வணங்கியது.
மெதுவாக அவ்வழியே வந்த தென்றலுக்கு இவ்வுரையாடல் எட்டிவிட,தென்றலோ அவ்விடத்தை விட்டு நகர முனைந்தது.
''ஓ... தென்றலே எங்கே நழுவுகிறாய்...உன் ஸ்பரிசத்தோடு நந்தவனத்தில் உலா வத்தானே நான் இங்கு வந்தேன்... என் மேலுனக்கென்ன சீற்றம்..?'' என்றாள்.
''புயலாக மாறும் தன்மை எனக்கிருக்கும் போது...நீ ஏன் என் தீண்டலை எதிர்பார்க்கிறாய்'', என்று அமைதியாய் பதிலளித்தது தென்றல்.
''இயற்கைக்கு செம்மையளிக்கும் இனிய ராகம் நீ.உலகில் உவக்காத செயல்கள் இடம் பெறும் போது சீற்றம் கொள்கிறாய்.. அதில் என்ன வந்தது.. ஒரு சிறந்த கவிஞனின் கவிச்சிறகை தட்டியெழுப்பக்கூடிய ஆற்றல் கொண்ட உன்னையும் நான் பாட வேண்டும். சம்மதம் தானே..? என்ற கவியரசியை மென்மையாய் வருடி தன் சம்மதத்தை ச்சொன்னது தென்றல். தென்றலின் ஸ்பரிசத்தால் குளிர்ந்து போன கவியரசி மலரை நோக்கி.. ''ரதி தேவியே, உன் ரீங்கார நாதன் எங்கே..'' என்று கன்களை சிமிட்டிக்கொண்டே கேட்க,. இதோ வந்து விட்டேன்.. ஏன் என்னைப்பாட மாட்டாயா.. என்று முணங்கியவாறு காதுக்குள் ரீங்காரித்தது வண்டு.
ஓ.. வாங்க.. மன்மதரே...உங்களைப்பாடாவிட்டால் ரதிதேவி என்னுடன் கோபித்துக்கொள்வாரே அதனால் உங்களையும் பாடித்தான் ஆக வேண்டும் என ரோஜாவை பார்த்து கண்ணடித்தாள்.
அவர்களின் அழகான உரையாடல் நடுவே எதிர்பாறாத விதமாய் படீர், படீர் என்று மின்னல் வெட்டியது.
ஒரு சந்தோசப்பொழுதில் இடித்ததை கேட்டு சீற்றம் கொண்ட கவியரசி.. மின்னலை நோக்கி ''ஏன் இந்த ஓரவஞ்சனை..'' என்று அதட்டினாள்.
'' நாங்கள் தான் பெய்தும் கெடுப்போம்... பெய்யாமலும் கெடுப்போம்..'' என்று நம்மை மட்டும் ஒதுக்கி விட்டு ஏனைய அனைத்தையும் பாடி ஓர வஞ்சகம் செய்தது நீயா... நானா..?என்று ஆவேசமாய் கதறியது மேகம்.
நிலைமையைபுரிந்து கொள்ள்ள முடியாத கவியரசி.. ''அழுதது போதும் நிறுத்துங்கள்.. யாரிப்படியெல்லாம் சொல்வது...பழங்காலக்காதலர்களின் தூதுவனல்லவா நீங்கள், பிரிவினை இல்லா வானில் சுதந்திர ஜீவியே... உங்களையும் பாடத்தான் போகிறேன்..'' எனக்கூறி.... தன் சேலைக்கு மேலால் போர்த்தியிருந்த சால்வையை தரையில் விரித்து அமர்ந்தாள்.
அனைத்து ஜீவராசிகளும் அவள் கவிதைக்காய் செவி திறந்து காத்துக்கிடக்க எங்கிருந்தோ வந்த விசும்பல் சத்தம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. குரல் வந்த திசை திரும்பியார்கள் அதிர்ந்தார்கள்.
அங்கே ஓர் கருங்கல் விசும்பிக்கொண்டிருந்தது.
தேவதையே நீ என்னை பாடா விட்டாலும் பரவாயில்லை உன் போன்ற ஒரு கவிக்குயிலை சுமக்கும் பாக்கியத்தையாவது எனக்குத்தர வேன்டும் நீ.கல் என்று என்னை நீயும்ஒதுக்கி விடாதே. தரையில் அமர்ந்து கவி பாடாது என்னிலமர்ந்து பாடு.'' என்றது..
இதைக்கேட்டவள் . ''கல்லே என்னை மன்னித்துக்கொள்..நான் உன் மேல் அமர முடியாது.. ஏனென்றால் கல்லுக்குள் ஈரம் என்றுன்னையும் நான் பாடவேண்டுமல்லவா...என்று கூற,கல் கல...கல...என்று சிரித்தது.அதனுடன் சேர்ந்து ஏனையஇயற்கை பந்தங்களும்
நாதமிசைக்க ஓரழகிய கவிதையை பாடினாள் கவியரசி.
மண்ணிலே பிறந்திடும் பூக்கள்
மாளிகையிலும் வரவேற்புக்கள்
செல்வம் வரியோர் பேதம்
தென்றலுக்கில்லை எப்போதும்
இகத்தினில் மலர் தாவும் வண்டு
இனம் பரவ உதவுதல் உண்டு
மேகமோ நிறத்தினில் கறுப்பு
மண்ணுக்குள் கொடையில் சிறப்பு
அன்னை போல் தாங்கிடும் கல்
அதனிடம் படிப்பினை கல்
