''அக்கா நான் சத்தியமாக ரகுவைக் காதலிக்கல..காதலிக்கல... காதலிக்கல.... நம்ம தூய நட்ப மத்தவங்களப்போல நீயும் கொச்சைப்படுத்தாத..புண்ணியம் கிடைக்கும் ப்ளீஸ்...'' கெஞ்சும் தோரணையில் ஆவேசமாக கத்தினாள் ஸ்ருதி.
''ஸ்ருதி... சும்மா கத்தாத...உங்க ஃப்ரென்ட்ஷிப்ப பத்தி நல்லா தெரியுமங்கறதால தான் சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ.உங்க ரெண்டு பேருக்கிடயிலயும் நல்ல அன்டஸ்டேன்டிங் இருக்கு.. உனக்கொரு தலை வலின்னாலே துடிச்சுப்போற அவன்.. அவனுக்கொரு பிரட்சினைன்னா பரிதவிச்சுப்போற நீ...இரவு பகலென்றில்லாம ஒருவர் பற்றி ஒருவர் நினைப்பதும்... தவிப்பதும்...நான் அறியாததல்லடீ.
நீ சாப்பிட்டயா..க்லாஸ் போனியா...தூங்கிட்டியா என நொடிக்கொரு தரம் ஆராயும் அவன் அன்புக்கு பாத்திரமாகும்... பாக்கியம் உன் தலையில் எழுதில்லன்னா நாமென்ன பண்ண முடியும்... யோசிசிசிப்பாரு.... உன் பிடிவாதம், உன் ஸ்ட்ரெங்த்,உன் வீக்னஸ், உன் தேவை,உன் சந்தோசம்..... இப்படி உள்ளூர உன்னபத்தி தெரிஞ்சவன் ரகு...நீயே ஒரு வட்டத்த கீறி அதுக்குள்ள உட்காந்துகிட்டு அத விட்டு வெளியே வற மாட்டேன்னு அடம் பிடிக்கிறே... இதுக்கு மேல நான் உன் விசயத்துல தல இடறது எனக்கும் நல்லதில்ல, ஏன்னா உண்மயா தூங்குறவள எழுப்பலாம்....தூங்குறாப்போல நடிக்கிறவள எழுப்ப முடியுமா...ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ,பாலத்தான் கொடுக்க முடியும் பாக்கியத்த கொடுக்க முடியாது.. எல்லாம் கை மீறிப்போன பின்ன எங்காவது ஒரு குட்டிச்சுவரிருந்தா போய் முட்டிக்கோ.
இனி நீயாவது உன் வாழ்க்கையாவது... நான் வாறேன்...'' பட படவென்று கூறிவிட்டு ...சட்டென்று அகன்றாள் .
தினமும் தோழியர் கூறும் பல்லவியை தான் அக்காவும் பாடினாள் என்றாலும்...இன்று அவளுக்குள்ளாயிரம் பட்டாம் பூச்சுக்கள் பறக்க ஆரம்பித்தன...
''ச... இத்தனை நாளும் எனக்கு தோணல்லயே...அக்காவே இத்தனை சொல்லும் போது...இந்தஉண்மையான நட்பு காதல் எனும் பரிணாமம் பெற்றால்... நிச்சயம் கல்யாண மேடையில் தானே அரங்கேற்றம் நிகழும்.இனியும் வேண்டாம் இந்த வீண் பிடிவாதம்,ரகு.. பாவம்டா.. நீ, எத்தனை தடவை உன் காதலை சொல்ல முயன்றிருக்கிறாய்... உள்ளுக்குள் மானசீகமாய் காதலை வளர்த்துக்கொண்டு என் நட்பு சென்டிமென்டுக்காய் எத்தனை முறை தான் மெளன போராட்டம் நிகழ்த்தியிருப்பாய்.. இன்றோடு உன் மெளனம் கலையட்டும்..இத்தனை நாளும் நீ தவிக்க நானே காரணம்...உன் ரெண்டு வருஷ தவிப்பு இந்த ஒரு நிமிஷ தவிப்பை விட மேலானது தானே...ஸாரிடா....''
அவள் எண்ண அலைகளை ஆயிரம் புல்லாங்குழல் கொண்டும் மீட்ட முடியாது என்பதாய் உணர்ந்தாளவள்.
அவனுக்கு நல்ல தோழியாய்....சிறந்த மனைவியாய்...ஒரு தாயாய்..சில சந்தர்ப்பங்களில் சகோதரியாய்... அவ்வப்போது குழந்தையாய்.....அவனையும் அவன் உடமைகளையும் ஆழும் எஜமானியாய்...அய்யோ... நினைக்கும் போதே..இத்தனை சுகமாக இருக்கிறதே...கடவுளே..
சிறகடித்துப்பறந்த மனசை சிரமப்பட்டு சிறைப்படுத்தியவளாய் ரகுவின் தொலைப்பேசி எண்களை சுழற்றினாள்.
'ஹாய் ஸ்ருதி... உனக்கு ஆயுசு நூத்தியொன்னும்மா.. சத்தியமா இப்ப கூட உன்ன தான் நெனச்சுட்டிருந்தேன். நீயே லைன்ல வந்தட்டே.. '
'அப்படடியா... ஏன் என் அனுமதி இல்லாம என்ன நெனச்சீங்க...' போலியாய் சிணுங்கினாள்.
''ஹ.... இது நல்லா இருக்கே..என்னிளுள்ளவள நினைக்க நான் ஏன் உன்ன கேட்கனும்...''
அவள் சந்தோசத்தால் முகம் சிவந்து போனதை தொலைபேசியூடாக அவன் அறிய நியாயமில்லை.
அவன் தொடர்ந்தான் ''ஸ்ருதி ஒரு விசயம் பேசணும்.....'
'' ம்ம் சொல்லுங்க....."
''உனக்கு தெரியுமா... எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா அது நீ ஒருத்திதான்னு எங்கம்மா ஒத்த கால்ல நின்னிருந்தாங்க..''
'ம்ம்.............................''
''பயப்புடாத ஸ்ருதி எனக்கு தெரியும்... உனக்கு இந்த காதல் கல்யாண சமாச்சாரம் எல்லாம் பிடிக்காதுன்னு...அதனால தான் அம்மாக்கு புரியுற மாதிரி எடுத்துச்சொன்னேன்...
''..........................................''
''இந்த மாதிரி எண்ணம் இருக்கிறது தெரிஞ்சா ஸ்ருதி என்கூட பழகுவதையே நிறுத்திடுவாம்மா..உன் கற்பனைக்குதிரைக்கு கடிவாளம் போடுன்னு...''
அம்மா மூன்று நாட்களா புலம்பினாங்க... ரொம்ப யோசிச்சு... ப்ராயத்தனப்பட்டு... எங்க அத்த பொண்ணு ப்ரமிளாவுக்கும் எனக்கும் நிச்சயம் பன்னிட்டாங்க... எப்படி என் சாமர்த்தியம்....??
''..........''
''ஸ்ருதி... இனிமேல் என் வாழ் நாள் பூராவும் உன் ப்ரென்ட் ஷிப் எனக்கு கிடைக்கும் தானே..... காலத்துக்கும் என் தோழியாய் நீ எனக்கு வேனும் ஸ்ருதி...'' கெஞ்சினானவன்.
நீண்டதாய் ரகு பேசி முடிக்க அந்த வார்த்தைகள் அவளது தலையில் இடியாய் வீழ்ந்தது.
சற்று முன் அவள் மீட்டி அழகு பார்த்த இதய வீணை அவள் இதயம் போலவே நரம்பறுந்து கீழே விழுந்தது.
'இளைய நிலா'
ஃபஸ்மினா அன்ஸார்.

No comments:
Post a Comment