வாய்ப்பொன்று
நாற்காலி தந்தால் போதும்
வாலில்லா
நாற்காலி ஆகின்றார்கள்
இமயத்தில் பதவி என்று
கூறுவார்கள்
சமயத்தில் காலையும்
வாருவார்கள்
சந்தியிலே வீராப்புக்
கதைப்பார்கள்
சந்திக்கப் போனால்கை
விரிப்பார்கள்
உதவுதற்கே பதவியென்று
புழுகுவார்கள்
கதவுகளைப் பூட்டிவைத்தே பழகுவார்கள்
மனிதம் பற்றி மணிக் கணக்கில் பேசுவார்கள்
கடிதம் ஒன்றை எழுதித்தர
கூசுவார்கள்
கடமையிலே கண்ணென்று
அலட்டுவார்கள்
கருமபீடம் சென்றவுடன்
விரட்டுவார்கள்
சமூகம் சமூகமென்று
சளப்புவார்கள்
சந்தேகம் தீர்க்கப் போனால்
குழப்புவார்கள்
தூரநின்று தொண்டனைப் போல்
காட்டுவார்கள்
தொடர்ந்து சென்றால் முகத்தை முழம்
நீட்டுவார்கள்
கோல் எடுத்தால் கென்ரீனில்
அறுக்கிறார்கள்
கூட்டமொன்றில் என்றுபதில்
இறுக்கிறார்கள்
அழைப்பெடுத்தால் தான் எடுப்பேன்
எனப் பகர்வார்கள்
அடுத்தவாட்டி எடுக்கும்போது
அதுவும் சொல்லார்கள்
வெளியிலெமைக் காணும்போது
பல் இழிப்பார்கள்
உள்ளே நாம் சென்றுவிட்டால்
முகம் சுழிப்பார்கள்
அதிகாரம் ஆட்சியெல்லாம்
ஓய்ந்திடும் மட்டும்
அரசபணி அறுபதுடன்
முடிவினை எட்டும்
அகந்தையெல்லாம் ஆசனத்தில்
இருக்குமட்டும்
அடங்கிவிடும் இறங்கிவிட்டால்
அவர்கள் கொட்டம்
பஸ்மினா அன்ஸார்
No comments:
Post a Comment